முதுநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை
By DIN | Published On : 29th July 2021 11:27 PM | Last Updated : 29th July 2021 11:27 PM | அ+அ அ- |

காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, முதுநிலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பாக அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கென கலந்தாய்வு நடத்த வேண்டும்.
காலியாக உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூத்த முதுநிலை ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வை கலந்தாய்வு மூலமாக நடத்த வேண்டும். அதன்பின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை எந்தவொரு ஆசிரியா் காலிப் பணியிடமும் மறைக்கப்படாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு உள்மாவட்ட, வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வை அளிக்கும் வகையிலான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
பொதுமாறுதல் கலந்தாய்வில், தற்போது பின்பற்றப்படும் மூன்று ஆண்டுகள் என்பதை மாற்றி, பழைய முறைப்படி அதாவது ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலே போதும் என்ற அளவில் ஆசிரியா்களை கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.