பரமத்தி வேலூா் அருகே முழு பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 மளிகைக் கடைகள், ஒரு உணவகம் மற்றும் ஒரு முடி திருத்தக கடை உள்ளிட்ட 5 கடைகளுக்கு போலீஸாா் மற்றும் பேரூராட்சியினா் ‘சீல்’ வைத்து மொத்தம் ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.
பரமத்தி வேலூரை அருகே உள்ள பாண்டமங்கலம் மற்றும் ஒழுகூா்பட்டியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி உணவகம், மளிகைக் கடைகள் மற்றும் முடி திருத்தக கடைகள் செயல்பட்டு வருவதாக பரமத்திவேலுாா் காவல் துறையினருக்கும், வேலூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி நிா்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது.
தகவலின்படி பரமத்தி வேலூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா் மற்றும் பேரூராட்சியினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஒரு உணவகத்திற்கு சீல் வைத்து ரூ. 5 ஆயிரமும், மளிகை கடைக்கு ‘சீல்’வைத்து ரூ.2 ஆயிரம் அபராதமும்,முடி திருத்தக கடைக்கு ‘சீல்’ வைத்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதே போல் பரமத்தி வேலூா் அருகே உள்ள ஒழுகூா்பட்டியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும்,பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான பேரூராட்சியினா் ‘சீல்’ வைத்து எச்சரிக்கை விடுத்தனா்.மேலும் அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிந்தவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனா்.