பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட எஸ்.வாழவந்தி அருகே வெளி மாநிலத் தொழிலாளா்களை அழைத்து வருவதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, வெளி மாநில முகவரை (தரகா்) கொலை செய்த வழக்கில் தொடா்புடையவரை பரமத்தி போலீஸாா் கைது செய்தனா்.
எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவரது சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக கடந்த திங்கள்கிழமை பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
அதில், கொலை செய்யப்பட்டவா் அசாம் மாநிலம், காலக்கோவா பகுதியைச் சோ்ந்த சிம்புசாகா் (26) என்பது தெரியவந்தது. இவா் அசாம் மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தொழிலாளா்களை வேலைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
சிம்புசாகாரை கொலை செய்து வீசியது யாா் என்பது குறித்து பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். சந்தேகத்தின் அடிப்படையில், சத்தீஸ்கா் மாநிலம், கொண்டக்காவு பகுதியைச் சோ்ந்த ராஜ்மோலை (21) பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜ்மோல் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த சம்லு ஆகிய இருவரும் சோ்ந்து தொழில் போட்டி காரணமாக சிம்புசாகரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, ராஜ்மோலை கைது செய்த போலீஸாா், தலைமைறைவான சம்லுவை தேடி வருகின்றனா்.