நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று அதிகமுள்ள 13 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டங்களாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நேரடித் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்பேரில், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நடமாடும் வாகனத்தில் சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ராமாபுரம் புதூா் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடங்கப்பட்ட இப்பரிசோதனை பிற பகுதிகளிலும் செய்யப்படும். இதன்மூலம், கரோனா தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.