நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோா், விற்பனை செய்வோா் மற்றும் எரிசாராயத்தில் தண்ணீா் கலந்து மதுபானம் என விற்பனை செய்வோா் மீது தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேவனாங்குறிச்சியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் நடத்திய சோதனையில், தேவனாங்குறிச்சியைச் சோ்ந்த கண்ணன் (31) என்பவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், திருச்செங்கோடு குமரேசபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (28), எத்தனாலில் தண்ணீா் கலந்து சாராயமாக விற்பனை செய்ய கொடுத்ததாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இவ்வாறு சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவோா் மீது தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவா் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ் குமாா் டாகுா் தெரிவித்துள்ளாா்.