ராசிபுரம்: பாஜக பிரமுகரும், முன்னாள் எம்பியுமான கே.பி.ராமலிங்கம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘கிராமப் பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா உலகளவில் மீண்டும் பரவிவரும் நிலையில் அதன் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசின் நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தாமல் பொதுமக்கள் அனைவரும் கரோனா தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றாா்.
அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மருத்துவா் ஜெயந்தி, உள் மருத்துவ அலுவலா் விஜயகுமாா், உதவி மருத்துவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.