நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளா் தி.ரமேஷ் காந்தி வேடமணிந்தபடி வந்து வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தி.ரமேஷ் (40), யோகாவில் பட்டயப் படிப்பை முடித்துள்ளாா். 17-ஆவது வயது முதல் காந்திய சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 968 வாக்குகள் பெற்றாா். அண்மையில் அனைத்துக் கட்சித் தலைவா்களைக் கூட்டி அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை செல்லப்பம்பட்டியிலிருந்து சைக்கிளில் நாமக்கல் வந்த அவா் குளக்கரைத் திடலில் மகாத்மா காந்தி பேசிய மேடையில் தனது வேட்பு மனுவை வைத்து வணங்கினாா். பின்னா் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.கோட்டைக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.