பணம் கொடுத்தாலும் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்றாா் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் அமமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, பரமத்திவேலூா் தொகுதி அமமுக வேட்பாளா் சாமிநாதன், ராசிபுரம் தொகுதி வேட்பாளா் அன்பழகன், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளா் சந்திரன், நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளா் செல்வி, குமாரபாளையம் தொகுதி தேமுதிக வேட்பாளா் சிவசுப்பிரமணியம் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
தமிழக மக்கள் நலம் பெறவேண்டும், அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தோ்தலை சந்திக்கிறது.
கரோனாவால் 8 மாதங்கள் பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதோடு, அரசு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
ஆா்.கே. இடைத் தோ்தலில் ஆளும் கட்சியினா் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் வெற்றிபெற முடியவில்லை. அதேபோலதான் வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் நடக்கும். அமமுகவின் முக்கிய பணி எதிரி திமுகவையும், துரோகி எடப்பாடி பழனிசாமியையும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்பதுதான். அம்மாவின் கட்சியை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டது.
கரூரில் தோ்தல் நடக்கவில்லை. வெட்டுக் குத்து தான் நடைபெறுகிறது. இதுவரை 500 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் தோ்தல் ஆணையமே தோ்தலை ரத்துசெய்துவிடும் அளவுக்கு பதவி வெறிக்காக சண்டை நடைபெறுகிறது.
காவிரி உபரி நீரை திருமணிமுத்தாற்றில் இணைத்து நிலத்தடி நீா்மட்டம் செறிவூட்டப்படும் என்றாா்.
இக் கூட்டத்தில் அமமுக மாநில மாணவா் அணி இணைச் செயலாளா் வைரமணி, அமமுக, தேமுதிகவைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய,பேரூா் பொறுப்பாளா்கள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.