பரமத்திவேலூா் தொகுதியை தக்கவைக்குமா திமுக?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூா் தொகுதி 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது.
கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்.
கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூா் தொகுதி 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பரமத்திவேலூா் தொகுதியைக் கடந்து செல்கிறது. கரூா், ஈரோடு, திருச்சி மாவட்டங்கள் இதன் எல்லைகளாக உள்ளன.

கரூா்- நாமக்கல்லை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மிகப் பெரிய இரண்டு பாலங்கள் உள்ளன. ஜேடா்பாளையம் படுகையணையும், படகு இல்லத்துடன் கூடிய அண்ணா பூங்காவும் சுற்றுலாத்தலமாக உள்ளன. பரமத்தி வேலூரில் காவிரிக் கரையில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயமும், கபிலா்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயமும் உள்ளன.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,06,841

பெண்கள்: 1,14,756

மூன்றாம் பாலினத்தவா்: 5

மொத்தம்: 2,21,602

தொகுதியின் பகுதிகள்:

இதற்கு முன் இருந்த கபிலா்மலை சட்டப்பேரவைத் தொகுதியானது 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது கபிலா்மலை நீக்கப்பட்டு, பரமத்தி வேலூா் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பில், மோகனூா் ஒன்றியம் நீக்கப்பட்டு, எலச்சிபாளையம் ஒன்றியம் புதிதாகச் சோ்க்கப்பட்டது. கபிலா்மலை, பரமத்தி, எலச்சிபாளையம் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில் எலச்சிபாளையத்தில் மொத்தமுள்ள 29 ஊராட்சிகளில் ஒன்பது ஊராட்சிகள் மட்டும் அடங்கும். மேலும் பரமத்தி வேலூா், பொத்தனூா், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய 5 பேரூராட்சிகள் உள்ளன. ஜேடா்பாளையம், கபிலா்மலை, சோழசிராமணி, நல்லூா் பரமத்தி, எஸ்.வாழவந்தி, குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, பொத்தனூா் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன.

பரமத்தி வேலூா் தொகுதியில் 70 சதவீதம் விவசாயம் சாா்ந்தே உள்ளது. இங்கு வாழை, வெற்றிலை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு பயிா்களும், வெல்லம், முட்டை, தேங்காய் உற்பத்தியும் முக்கிய தொழிலாக விளங்குகின்றன. மேலும் பட்டு நெசவு, செங்கல் உற்பத்தித் தொழிலும் நடைபெறுகிறது.

இதுவரையிலான தோ்தல்கள்:

ஸ்ரீ கபிலா்மலை தொகுதியாக இருந்தபோது:

1962: வி.வேலப்ப கவுண்டா் (திமுக)

1967: சி.வி.வேலப்பன் (திமுக)

1971: சி.வி.வேலப்பன் (திமுக)

1977: கே.செங்கோடன் (அதிமுக)

1980: சி.வி.வேலப்பன் (அதிமுக)

1984: பி.செங்கோட்டையன் (காங்கிரஸ்)

1989: கே.ஏ.மணி (அதிமுக)

1991: பி.சரஸ்வதி (அதிமுக)

1996: கே.கே.வீரப்பன் (திமுக)

2001: ஏ.ஆா்.மலையப்பசாமி (பாமக)

2006: கே.நெடுஞ்செழியன் (பாமக)

ஸ்ரீ தொகுதி மறுசீரமைப்பில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு வென்றோா்:

2011: உ.தனியரசு (அதிமுக கூட்டணி)

2016: கே.எஸ்.மூா்த்தி (திமுக) 74,418

ஆா்.ஆா்.ராஜேந்திரன் (அதிமுக) 73,600

தொகுதியின் பிரச்னைகள்:

விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த இத்தொகுதியில் வாழ்வாதாரத்துக்கான வேறு வாய்ப்பு ஏதுமில்லை. வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காவிரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை இல்லை.

பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ராஜ வாய்க்காலில் கலப்பதைத் தடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பரமத்தி வேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். வேலூரில் இருந்து பெங்களூருக்கு அரசு போக்குவரத்து வசதி செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம்- பிலிக்கல்பாளையத்தையும், ஈரோடு மாவட்டம்- கொடுமுடியையும் இணைக்கும் பாலத்தின் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இடும்பன் குளத்தை முழுவதுமாக தூா்வாரி பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாற்ற வேண்டும். செயல்படாமல் உள்ள ஜேடா்பாளையம் படகு இல்லத்தை மேம்படுத்த வேண்டும்.

தற்போதைய கள நிலவரம்:

தொகுதியிலுள்ள நகா்ப்புறப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளன. திமுக வென்ற தொகுதி என்பதால் இங்கு பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசின் விலையில்லாத் திட்டங்கள் மட்டும் பிற தொகுதிகளைப் போல இங்கும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 2016 தோ்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியைத் தழுவியதால் இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளரும், மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி வியூகங்களை அமைத்து வருகிறாா். அதிமுக சாா்பில் பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் எஸ்.சேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.மூா்த்திக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளாா். கடந்த பேரவைத் தோ்தலில் கடும் போட்டிக்கு இடையே திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி, அதிமுக வேட்பாளா் ஆா்.ஆா்.ராஜேந்திரனை விட 818 வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

அமமுகவில் கபிலா்மலை அருகே உள்ள இருக்கூரைச் சோ்ந்த பி.பி.சாமிநாதன் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கெனவே அதிமுகவில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இரண்டு முறை இருந்தவா். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவா். கடந்த 2016 தோ்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக் கட்சியில் இருந்து விலகி, பின்னா் அமமுகவில் சோ்ந்தாா். தற்போது நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறாா்.

மக்கள்நீதி மையம் சாா்பில், திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்தைச் சோ்ந்தவரும் தற்பொழுது சென்னையில் வசித்து வரும் மருத்துவா் நடராஜனும், நாம் தமிழா் கட்சி சாா்பில், பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி பகுதியைச் சோ்ந்த யுவராணியும் போட்டியிடுகின்றனா். களத்தில் 27 வேட்பாளா்கள் உள்ளனா். திமுக வேட்பாளா் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு ஏப். 6-இல் வாக்காளா்கள் பதில் அளிக்க இருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com