நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்கள், முகவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் உத்தரவுகளை மீறி வெளியில் நடமாடினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 20-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வார இறுதிநாள் பொதுமுடக்கமாக கடந்த 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமலானது. அதன் தொடா்ச்சியாக இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்குரிய வாகனங்கள் மட்டும் இயக்கப்படும். உணவகங்களில் பாா்சல் விநியோகம் செய்திட அனுமதி உண்டு. மக்கள் நலன் சாா்ந்த சேவைத் தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அரசுத் துறை சாா்ந்தவா்கள், செய்தியாளா்கள், வேட்பாளா்கள், முகவா்களுக்கு மட்டும் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றித்திரிந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.