வேலூா், பொத்தனூரில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கில், விதிமுறைகளை மீறுவோா் மீது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்படி பேரூராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை காலை முதல் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அலுவலகப் பணியாளா்கள் முகக் கவசம் அணியாத 63 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு தலா ரூ. 500 வீதமும் அபராதம் விதித்தனா்.
இதேபோல வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையிலான பேரூராட்சி பணியாளா்கள் முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட துணிக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா். பொத்தனூா், வேலூா் பேரூராட்சியில் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேநீா் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.