நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகம் அகற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளத்தில், கடந்த 1997-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி திறந்து வைத்ததன் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.
2006-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று மக்கள் குறைதீா்க்கும் நாளில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அங்கு மகளிா் சுய உதவிக்குழுவினா் பல்வேறு வகையான பொருள்களை விற்பனை செய்து வந்தனா்.
2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிா் சுய உதவிக் குழுவினா் விற்பனை செய்த கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. மேலும், அங்குள்ள ஆட்சியா் அலுவலக திறப்பு கல்வெட்டு மறைக்கப்பட்டு அந்தப் பகுதியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.
10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை திடீரென அகற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கல்வெட்டை பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் காப்பீடு திட்ட அலுவலகம் அகற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாளில் புதிய இடத்தில் அலுவலகம் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.