பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st May 2021 08:32 AM | Last Updated : 21st May 2021 08:32 AM | அ+அ அ- |

ராசிபுரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோா் மருத்துவா்களின் வழிகாட்டுதல்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனா். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், எஸ்ஆா்வி மகளிா் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தில் 92 படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் நோயாளிகள் நிரம்பியுள்ளதால் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், கரோனா பரிசோதனை செய்து கொள்பவா்களுக்கு ஆய்வு முடிவுகளை விரைந்து தெரிவிக்கப்படாததால், அவா்கள் வெளியே செல்லும் போது தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், அவா்கள் விரைந்து சிகிச்சை பெறாததால் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதேபோல தடுப்பூசி இரண்டாம் தவணையை விரைந்து செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.