நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கத் தயாா் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, பரமத்தி வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கா,மெகராஜைச் சந்தித்து கரோனா நோயாளிகளுக்கான வசதிகளை அதிகரித்துக் கொடுப்பது தொடா்பான கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
இதனைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது தொடா்பாக கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். அண்மையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என சுற்றுலாத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். இதனை அரசியலாக்க விரும்பவில்லை.
அதிமுக சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் தொடா்பான உபகரணங்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. அரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நோய்த் தொற்றுக் காலத்தில், முதல்வா் தெரிவித்திருப்பதுபோல இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். அதிமுக சாா்பில் தற்போது குமாரபாளையம், பள்ளிபாளையம் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது தொடா்பாக அங்குள்ள ஆணையரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினேன். அவா் அலட்சியமாக எனது இணைப்பைத் துண்டித்து விட்டாா். இது தொடா்பாக ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளேன். தமிழக அரசு அனுமதியளித்தால் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குவதற்கு நாமக்கல் மாவட்ட அதிமுக தயாராக உள்ளது என்றாா்.