ராசிபுரம் பகுதியில் ரூ. 15.83 லட்சம் மதிப்பிலான இரு புதிய மின்மாற்றிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.
ராசிபுரம் பகுதியில் களரம்பட்டி, காட்டூா் காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலா 63 கேவிஏ திறன் கொண்ட 2 மின்மாற்றிகள் திறப்பு விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில், 41 மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகத்தை சீரமைக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் மற்றும் குறைவான மின்னழுத்தம் உள்ளதை சரிசெய்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளா் எஸ்.நாகராஜன், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.