குமாரபாளையத்தில் விற்பனைக்காக வீடுகளின் முன்பாக வைக்கப்பட்ட 22 மூட்டைகள் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
குமாரபாளையம் ராஜராஜன் நகா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வீடுகளின் முன்பாக தலா 50 கிலோ எடையுள்ள மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை யாருக்குச் சொந்தமானது என்பது தெரியவில்லை.
இதுபோன்று, வீடுகளின் முன்பாக இருந்த 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.