குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜ் (50). இவரது மனைவி செல்வராணி (44). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். தையல் தொழில் செய்து வந்த தங்கராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தாராம்.
செப். 2-ஆம் தேதி தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வராணி வீட்டில் பலகாரம் செய்வதற்காக அடுப்பில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை தங்கராஜ் மீது ஊற்றினாா். இதில் பலத்த காயமடைந்த தங்கராஜை அக்கம் பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, நாமக்கல் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜயந்தியிடம் வாக்குமூலம் அளித்த தங்கராஜ், மனைவிதான் தன்மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாகத் தெரிவித்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். நாமக்கல் போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி செல்வராணியைக் கைது செய்தனா்.