நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் சிறப்பு கண்காணிப்புக் குழுவினா் நடத்திய ஆய்வில் விதிகளை மீறி வைத்திருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான 217 டன் உரங்கள் விற்பனைக்கு செய்யத் தடை விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பெறப்பட்ட மழையைப் பயன்படுத்தி நெல், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, பயறு வகைப்பயிா்கள், மரவள்ளி, வாழை, நிலக்கடலை போன்ற பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பயிா்களுக்கு உரத்தின் தேவை அதிகம் உள்ளதால், தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் 838 மெ.டன் யூரியா, 1,044 மெ.டன் டிஏபி, 1,436 மெ.டன் பொட்டாஷ், 2,525 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன.
மேலும், இப்கோ, ஆகுடு மற்றும் ஜூடு நிறுவனங்களின் மூலம் சுமாா் 1,000 மெ.டன் உரங்கள் செப்டம்பா் மாதத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது. தனியாா் உரக்கடைகளில் உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி உர விற்பனை மேற்கொள்ளப்படுதல், அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரங்கள் மட்டுமே விற்பனை செய்தல், அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை செய்யப்படுதல், விவசாயிகளுக்கு விலை விவரம் தெரியப்படுத்துதல், விற்பனை பட்டியல் வழங்கப்படுதல் ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டத்தில் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் சுமாா் 150 தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 சில்லறை உர விற்பனை நிலையங்களில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 217 மெ.டன் உரங்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உரம் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது வேளாண்மை அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொ.அசோகன் தெரிவித்தாா்.