ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள சீராப்பள்ளி அருகே ஒரு சமூகத்தவரின் கோவில் சிலையை இடித்ததை தொடர்ந்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீராப்பள்ளி பகுதியில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான அய்யனார் கோவில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் இக்கோவிலை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் கோவில் சிலையை இடித்துள்ளனர். இந்த நிலையில் கோவிலை இடித்த மர்ம நபர்களை கைது செய்யக் கோரி சீராப்பள்ளி பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் - ஆத்தூர் சாலையை மறித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து அவ்வழியே பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடம் சென்று சமரசம் பேசினர்.
ஆனால் இதனை ஏற்காத பொதுமக்கள் இடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டு மறியலை தொடர்ந்து நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஆயுதப்படை காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி, கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடு்ககப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டனர்.