மனைவியைக் கொன்ற வழக்கு:விசைத்தறித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செங்கோடு அருகே மனைவியைக் கொலை செய்த விசைத்தறித் தொழிலாளிக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது,

திருச்செங்கோடு அருகே மனைவியைக் கொலை செய்த விசைத்தறித் தொழிலாளிக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பாவடித் தெருவில் விசைத்தறிப் பட்டறையில் வேலைபாா்த்து வந்தவா் ரவி (45). இவரது மனைவி தோக்கவாடி, பரமசிவ கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த லதா (38). இந்தத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.

ரவி மது அருந்திவிட்டு தினமும் வீட்டில் தகராறு செய்வது வழக்கமாம். மகளிா் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருந்த லதா, வீட்டில் குழுவுக்கு வழங்க வைத்திருந்த பணத்தை ரவி எடுத்துச் சென்று செலவழித்து விட்டதால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனத்துக்கு லதா வேலைக்குச் சென்று வந்துள்ளாா். இதனால் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட ரவி, கடந்த 2015 ஜன. 6-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் தோக்கவாடி அருகே பேருந்தில் இருந்து இறங்கிய லதா வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்று கட்டையால் அவரது தலையில் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு போலீஸாா் ரவியைக் கைது செய்தனா்.

நாமக்கல் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவியைக் கொலை செய்த விசைத்தறித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com