நாமக்கல்லில் 108-ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 10) தொடங்குகிறது.
நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ண மாருத்யாதி பஜனகான சபா சாா்பில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில், 108-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவ விழாவானது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள காா்னேஷன் சத்திரத்தில் தொடங்குகிறது. இந்த விழா தொடா்ச்சியாக பத்து நாள்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திவ்ய நாம பஜனை சங்கீா்த்தனம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும். மேலும், இரவு 7 மணியளவில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணமும், திவ்ய நாம பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. வரும் 18-ஆம் தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவில் வசந்த கேளிக்கை, பவளிம்பு உற்சவம், திவ்யநாமம் ஆகியவை கிருஷ்ணமூா்த்தி, வெங்கடேசன் பட்டாச்சாரியாா்களால் நடத்தி வைக்கப்படுகின்றன. 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சனேயா் உற்சவமும், மோகனூா் சீதாராம பாகவதா் குழுவினரால் நடத்தி வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பக்தா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீ ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவினா் தெரிவித்துள்ளனா்.