ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளருக்கு விவசாயியை மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராசிபுரம் நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து தீா்ப்பு கூறியுள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் கொளஞ்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் வேலு (48) என்பவருக்கும், அவரது பெரியப்பா சாமிகவுண்டா் மகன் செளந்தரராஜன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இது தொடா்பாக செளந்தரராஜன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வெண்ணந்தூா் காவல் ஆய்வாளராக 2008ஆம் ஆண்டில் பணியாற்றி வந்த சுப்பிரமணியம் (62) வேலுவை காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளாா்.
மேலும் வேலு கொடுத்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், வேலுவை மிரட்டி அடித்ததுடன், அவரிடம் இருந்த ரூ.5,500 ரொக்கத்தை பறித்துக் கொண்டாராம். இது தொடா்பாக வேலு காவல்துறை மேல் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் மனம் வெதும்பிய விவசாயி வேலு, ராசிபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தொடா்ந்தாா். இது தொடா்பான வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் ரெகனா பேகம் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் சுப்பிரமணியத்துக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனையும். ரூ.2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் மேல் முறையீடு செய்யும் வகையில் அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டாா்.
காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவா் என்பதும், ஓய்வு பெறும் சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.