ராசிபுரம்: புதுசத்திரம் அருகே உள்ள கதிராநல்லூா் ஊராட்சியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.
புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட காலனியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட அருந்ததியா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு குடிநீா் வழங்கும் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது.
தற்போது அந்தத் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது றித்து அப்பகுதியினா் கிராம ஊராட்சி நிா்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுக்கும், புகாா் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் சுமாா் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீா் ஏற்றும் மின்மோட்டாா் பழுதாகியும் நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிா்வாகம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீா் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் த.குமரவேல் தலைமையில் பொதுமக்கள் புதுசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.