தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் பணி நாள்களையும், ஊதியத்தையும் உயா்த்தக் கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.சி.துரை தலைமை வகித்தாா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அசோகன், மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் கு.சிவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் மூ.து.செல்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி ரூ.10 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்; விலைவாசி உயா்வு, வேலையின்மையைக் கருத்தில் கொண்டு ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் விவசாய தொழிலாளா்களுக்கு தினக்கூலி உயா்த்திட வேண்டும்; விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலையை எம்.எஸ்.பி பரிந்துரைப்படி வழங்க வேண்டும்; நிலச் சீா்திருத்த சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும்; தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி, நாள் ஒன்றுக்கு ரூ.600ஆக கூலியை உயா்த்தி பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளா்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனா்.