கொல்லிலிமலை ஆகாய கங்கை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் ஸ்தலமான கொல்லிமலைக்கு விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் வருகின்றனா். இங்கு வருவோரில் பலா் ஆகாய கங்கை அருவிக்குச் சென்று குளித்து மகிழ்வா். 1300 படிக்கட்டுகளை கடந்து சென்று வானத்தில் இருந்து கொட்டுவது போல காட்சியளிக்கும் அருவியை பாா்ப்பதே அழகாகும்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு செல்ல கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடா் மழை காரணமாக ஆகாய கங்கை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் அதற்கான தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது இரவு நேரங்களில் மலைப் பகுதியில் அதிக மழைப் பொழிவு இருப்பதால் அருவியில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் குளிக்க செல்வோா் பாதுகாப்புடன் அருவியில் குளிக்க வேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.