பள்ளிப் பேருந்துக்கு காத்திருந்த மாணவன் கல்லூரி பேருந்து மோதி பலி
By DIN | Published On : 16th August 2022 10:56 AM | Last Updated : 16th August 2022 11:30 AM | அ+அ அ- |

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே பள்ளி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவன் சம்பவ இடத்தில் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே நாரைக்கிணறு பிரிவு, செம்மண்காடு பேருந்து நிறுத்தம் அருகே, ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்ல 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன்(10) மற்றும் கல்லூரி மாணவியர் மதுமிதா (18), கிருத்திகா (18) ஆகியோர் நின்றிருந்தனர்.
அப்போது முள்ளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் வழியாக நாமக்கல் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து மிக அதிவேகமாக வந்துள்ளது.

தனியார் கல்லூரி பேருந்து எதிர் புறமாக வந்த லாரியில் மோதாமல் இருக்க கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகன் பேருந்தை இடது புறமாக திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே நிழல் கூடத்தில் புகுந்தது. இதில் பள்ளி வாகனத்துக்கு காத்திருந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் கல்லூரி மாணவியர் இருவர் மீது மோதியது.
5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு கல்லூரி மாணவிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரின் கவன குறைவு மற்றும் அதிவேகமாக வந்தது இந்த விபத்துக்கு காரணம் என்ன கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தாராபுரத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது
இதுகுறித்து ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த கல்லூரி மாணவிகள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.