நாமக்கல்: நாமக்கல்லில் மது போதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து தலைமை ஆசிரியர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன்(52). இவர் சுண்டைக்காய் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திண்டமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
பள்ளியில் வங்கி வரவு, செலவு கணக்குகளை மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்வதற்கான பணியை வட்டார வள மைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை ஆசிரியர் திருச்செல்வன் மது அருந்திவிட்டு வந்து அங்குள்ள பெண் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும், அந்த அலுவலகத்தில் உள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனது காரில் வேகமாக சுற்றி வந்தார். தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்திருந்த பலரும் இச்செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க: திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்
இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரிடம் புகார் தெரிவித்தனர். அந்த தலைமை ஆசிரியர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதுடன் தன்னை பணியிடை நீக்கம் செய்யுமாறு போதையில் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து அதிகாரிகள் இதர ஆசிரியர்கள் வெளியேற்ற செய்தனர்.
கல்வித்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் திருச்செல்வன்.