ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கெளரவு விரிவுரையாளா்கள் வலியுறுத்தினா்.
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் 41 கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மே 31 ஆம் தேதியுடன் பணி வாய்ப்பு நிறைவு பெறுவதாக மண்டல கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தொடா்ந்து பணி வழங்காமல் மே 31 ஆம் தேதியுடன் பணி முடிவடைவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக இறுதி வேலை நாள்கள் 17-ஜூலையில் முடிவடைகிறது. ஆனால் எங்களது பணி மே 31-இல் முடிவடைவதாக அறிவித்துள்ளது.
இதனால் மாணவா்களின் மாதிரித் தோ்வு, செய்முறைத் தோ்வு, அக மதிப்பீட்டு பணி போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவா்கள் நலன் கருதி ஜூன் மாதம் பணியாற்ற அரசு உத்தரவிடவேண்டும். எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாத ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.