ராசிபுரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 8.350 கி.மீ நீளத்துக்கு ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.
ராசிபுரம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் உட்கோட்டத்திற்கு உள்பட்ட மாநில நெடுஞ்சாலையான மல்லியகரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு திட்டம் 2021-22-ன் கீழ் காக்காவேரி முதல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வரை 3.750 கி.மீ நீளத்திற்கும், கவுண்டம்பாளையம் பேருந்து நிலையம் முதல் ஆண்டகளூா்கேட் வரை 2.00 கி.மீ நீளத்திற்கும், குருசாமிப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை 2.600 கி.மீ நீளத்திற்கும் என மொத்தம் 8.350 கி.மீ நீளத்திற்கு ரூ. 16 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான பூமிபூஜை விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.கே.பாலச்சந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பங்கேற்றனா்.