நாமக்கல்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை கிராமத்திற்கு இன்று காலை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றனர்.
தமிழக அரசின் மருத்துவ திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
50 லட்சமாவது பயனாளிக்கு சென்னை சிட்லபாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மருந்து பெட்டகத்தை வழங்கினார். 60 லட்சமாவது பயனாளிக்கு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் போதமலை மலை கிராமத்துக்கு உள்பட்ட கெடமலை கிராமத்தில் இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மருந்து பெட்டகத்தை வழங்கி அங்குள்ள பழங்குடியின மக்களிடையே உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மலைப் பகுதியில் யோகா தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.