ராசிபுரம்: ராசிபுரம் நகரில் சர்வதேச மகளிர் தின விழாவினை தொடர்ந்து மகளிர் தின பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ராசிபுரம் அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் கிளப், ஜேசிஐ அமைப்பு ஆகியன இணைந்து உலக மகளிர் தினப் பேரணியை நடத்தியது.
முன்னதாக ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாக நடைபெற்ற பேரணியை ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பி.ஜெயந்தி, டாக்டர் கலைச்செல்வி, இந்திய மருத்துவச் சங்க கிளைத் தலைவர் டாக்டர் சுகவனம், பொருளாளர் எஸ்.ரமேஷ், மகளிர் ஐஎம்ஏ.,.தலைவர் டாக்டர் சுகந்தி, செயலர் சுஜாதா, ராசிபுரம் ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கே.குணசேகர், சங்கத் தலைவர் எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், மகளிர் அமைப்பினர், இன்னர் அமைப்பினர் கலந்துகொண்டு வளரிளம் பருவ திருமணத்தை தடுப்போம், தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம், மார்பக பரிசோதனை மேற்கொள்வோம், உள்ளிட்ட பெண்கள் குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பேரணியாக பங்கேற்றனர். ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு புறப்பட்ட பேரணி கவரைத்தெரு, கடைவீதி, கச்சேரித்தெரு வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்தடைந்தனர்.
இந்தப் பேரணியில், ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இ.என்.சுரேந்திரன், பி.கண்ணன், வரதராஜன், பி.கதிரேசன், சீனிவாசன், முருகானந்தம், ஜேசிஐ அமைப்பின் தலைவர் எஸ்.சுகன்யா, நிர்வாகிகள் சசிரேகா, சதீஸ்குமார், பூபதி, சக்கரவர்த்தி, சதீஸ்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.