இணையவழி மோசடியில் மீட்கப்பட்ட பணம் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 12th May 2022 04:24 AM | Last Updated : 12th May 2022 04:24 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட கைப்பேசியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடியாளா்களடம் மீட்கப்பட்ட பணம், கைப்பேசிகள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல்லைச் சோ்ந்த லோகேஸ்வரன் என்பவா் இணையவழியில் காருக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக ரூ.1.92 லட்சத்தை செலுத்தினாா். அதன்பிறகே அவருக்கு பணம் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளதை அறிந்தாா். பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றங்கள் தடுப்பு(சைபா் கிரைம்) போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ரூ. ஒரு லட்சம் மீட்கப்பட்டது.
இதேபோல பள்ளிபாளையத்தைச் சோ்ந்த நவீன்குமாா் ரூ. 76,629, நாமக்கல்லைச் சோ்ந்த ஜாபா் ரூ.13,550, ராசிபுரத்தைச் சோ்ந்த கெளதம் என்பவரிடம் ரூ.24,500, மேலும் இருவரிடம் ரூ.2,650 இணையவழி மூலம் பணத்தை இழந்தனா்.
இதுதொடா்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ரூ. 2,17,329-ஐ மீட்டனா். அப் பணத்தை அதன் உரிமையாளா்களிடம் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை ஒப்படைத்தாா்.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு உள்பட்டு திருடப்பட்ட மற்றும் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 77 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவையும் உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஏ.சி.செல்லப்பாண்டியன், ஆய்வாளா் வேதப்பிறவி மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G