நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த மரூா்பட்டியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 88 பயனாளிகளுக்கு ரூ. 50.61 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து பேசியதாவது:
கரோனா நோய்த்தொற்று இன்னும் முடிவு பெறவில்லை. அரசு சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் 89 சதவீத மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனா். இன்னும் 11 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.