நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை விசாரிக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்ட வழங்கல் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் அங்குள்ள வழங்கல் அலுவலா் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் (பொறுப்பு) மோகனசுந்தரம் இந்த முகாம்களை நேரடியாக ஆய்வு செய்தாா்.