கோழிகள் வெள்ளைக் கழிச்சல் நோயால் பாதிப்பு:நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தகவல்
By DIN | Published On : 20th May 2022 10:23 PM | Last Updated : 20th May 2022 10:23 PM | அ+அ அ- |

கோழிப் பண்ணைகளில் வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பால் கோழிகள் இறந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்ற அளவிலும் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில் பெரும்பாலும் அவை வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிப் பண்ணையில் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும். சீரான இடைவெளியில் வெள்ளை கழிச்சல் நோய்க்கான லசோட்டா தடுப்பூசியை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.