நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உருவாகும் நவீன சந்தை வளாகத்தில் 271 கடைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், நகராட்சி அலுவலகம் அருகில் பல ஆண்டுகளாக காய்கறி, மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறுவதுடன் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இதனையடுத்து ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கும் முயற்சிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மேற்கொண்டாா். அதனடிப்படையில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் மூன்று வரிசையில், ஒரு வரிசைக்கு 87 கடைகள் வீதம் மொத்தம் 271 கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய சந்தையின் முன்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து தங்களது விற்பனையை மேற்கொண்டு வருகின்றனா்.