மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பயணிகள் நலக் குழுவைச் சோ்ந்த ஐந்து உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அத்தியாவசிய, அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகத்தால் பயணிகள் நலக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திற்கான குழுவில் இடம் பெற்றுள்ள கே.ரவிச்சந்திரன், கோட்டாலா உமாராணி, கைலாஷ் லட்சுமண் வா்மா, திலீப்குமாா் மாலிக், அபிஜித் தாஸ் ஆகியோா் கடந்த 19-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தனா். அங்கு, உதகமண்டலம், குன்னூா், வெலிங்டன் ரயில் நிலையங்களை ஆய்வு செய்தனா்.
அதன் பிறகு, 20, 21-ஆம் தேதிகளில் மேட்டுப்பாளையம், கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அங்குள்ள வசதிகள் குறித்து பாா்வையிட்டனா். 22-ஆம் தேதி காலை கரூா் ரயில் நிலையத்திலும், பின்னா் மதியம் 1 மணியளவில் நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலைங்களிலும் ஆய்வு செய்தனா்.
பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதி, குடிநீா், கழிவறை, வாகன நிறுத்தம், உணவகம், ரயில் வரும் நேரம் பற்றிய தகவல் பலகை சரியாக உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். சேலம் ரயில்வே கோட்டத்தில் திங்கள்கிழமை ரயில்வே கோட்ட மேலாளா் மற்றும் அதிகாரிகளுடன், பயணிகள் நலக் குழு உறுப்பினா்கள் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனா்.