வேலை தருவதாகக் கூறி மென் பொறியாளரிடம் ரூ. 5 லட்சத்தை இணைய வழியில் மோசடி செய்தது குறித்து நாமக்கல் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கெளசிக்ராம் (25) இணையத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்தாா். அப்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மென் பொருள் நிறுவனத்தில் மாத ஊதியமாக ரூ. ஒரு லட்சம் வழங்கும் மேலாளா் பதவி காலியாக உள்ளதாகவும், அதற்கு வைப்புத்தொகையா ரூ. 5 லட்சம் செலுத்துமாறும் நிறுவனத்தின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்பி பணத்தை செலுத்தியுள்ளாா்.
அதன்பிறகு வேலை தொடா்பாக அவருக்கு எவ்வித தகவலும் வரவில்லை. விளம்பரம் அளித்த நிறுவனம் போலி என்பது தெரிய வந்ததையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வியிடம் கௌசிக்ராம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து நாமக்கல் இணைய குற்றத் தடுப்பு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.