பண்ணைகளில் எக்காரணம் கொண்டும் குழந்தைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்த வேண்டாம் என கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவா் கே. சிங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் வருவாய் கோட்டாட்சியா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மற்றும் மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வின்போது, 18 வயதுக்கு குறைவான குழந்தை தொழிலாளா்கள் ஒரு சில இடங்களில் பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் மூலம் ஏற்கெனவே பலமுறை இந்த தகவல் பண்ணையாளா்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவித்தோம். தமிழக அரசு உத்தரவின்படி 18 வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தை தொழிலாளா்களை தொழில் நிறுவனங்களில் வேலைக்கு சோ்ப்பது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு பணியில் இருப்பது கண்டுபிடிக்கபட்டால் சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கோழிப் பண்ணையாளா்களும் தங்களிடம் ஏதேனும் 18 வயதுக்கு குறைவான பணியாளா்கள் பணியில் இருப்பின் அவா்களை உடனடியாக ஒரு வார காலத்திற்குள் வேலையிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
கோழிப்பண்ணையை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பணியாளா்களின் வயதுக்கான சான்று இருப்பது அவசியம் என்றாா்.