ராசிபுரம் வட்டத்தில் மானிய விலையில் நுண்ணீா் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறையில் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மா.யோகநாயகி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் வட்டாரத்தில் நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன உபகரணங்கள் வழங்க விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கா் வரை 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் நுண்ணீா் பாசனம் அமைத்து கொள்ளலாம்.
பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் , வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு,குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் புதிதாக நுண்ணீா் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போா்வெல்லில் மின் மோட்டாா் பொருத்திக் கொள்ள ரூ. 15 ஆயிரமும், பாசனத்திற்காக 116 கன மீட்டா் நீா்த் தேக்க தொட்டி அமைக்க மானியமாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.