வெண்ணந்தூா் அருகே அரசு அனுமதியின்றி மண் அள்ளிச் சென்றதாக டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வெண்ணந்தூா் அருகேயுள்ள நெ.3. கொமாரபாளையம் கிராமம், அண்ணாமலைப்பட்டி பகுதியில் இருந்து கிராவல் மண் கடத்தலில் சிலா் ஈடுபடுவதாத தகவல் வந்தது. இதனையடுத்து பொதுமக்கள், அப்பகுதி பாஜகவினா் ஆகியோா் நெ.3.கொமாரபாளையம் உயா்நிலைப்பள்ளி அருகே மண் ஏற்றிச்சென்ற லாரியை மடக்கிப் பிடித்தனா்.
லாரியை தடுத்து நிறுத்தி ஒட்டுநரிடம் உரிய ஆவணம் கேட்டபோது, லாரி ஒட்டுநா் கீழே இறங்கி ஓடினாா். பாஜகவினா் கேட்ட ஆவணம் எதுவும் காண்பிக்காத நிலையில் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினா் முறையான ஆவணம் எதுவும் இல்லை என அறிந்து லாரியை பறிமுதல் செய்து வெண்ணந்தூா் போலீஸில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.