வேலூா், பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: ஆட்சியா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடங்களில் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நாமக்கல் ஆட்சியா் ச.உமா தலைமையில் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் மதுரா செந்தில் முன்னிலையில் பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளுக்கான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியா் ச.உமா கூறியதாவது:
பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தோ்வு செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிதாக கசடு நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ், பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்படும். பாதுமக்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக பரமத்தி வேலூா் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளுக்கான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.