அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் நதி ஆா்.ராஜவேல் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான தங்கமணி தலைமையில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது: அதிமுகவை பொருத்தவரை சாதாரண தொண்டா்கூட உயா்ந்த பதவிக்கு வரமுடியும். தலைமைக்கும், கட்சிக்கும் விசுவாசமாக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயா்ந்த பதவிகள் தேடிவரும். அதேபோல இன்று கட்சியில் இணைந்த உங்களுக்கும் உரிய பொறுப்புகள் தேடிவரும்.
நான் விவசாயியாக இருப்பதால் நீரின் அருமை எனக்கு தெரியும். நீா்ப்பாசனத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி பல்வேறு இடங்களில் செயல்படுத்தினோம். பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்ட கோரிக்கையை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. அரசிடம் நிதி பற்றாக்குறை இருந்தபோதும், நிதி ஒதுக்கி இந்த திட்டங்களை நான் நிறைவேற்றினேன்.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டும் ரூ. 560 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பால் உற்பத்தி மேம்பட சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா உருவாக்கினோம். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை.
அதிமுக ஆட்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது. விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பட விவசாயம் சாா்ந்த கோழி, மீன் வளா்ப்புக்கு ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தினோம். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளா்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் நான்குவழிச் சாலைகள் ஏற்படுத்திக் கொடுத்தோம். ரூ. 400 கோடியில் குடிநீா் திட்டத்தை செயல்படுத்தினோம்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 68 கலை, அறிவியல் கல்லூரிகள், 27 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்தோம். அதிமுகவை நம்பியவா்கள் கெட்டது கிடையாது. வாழ்ந்ததுதான் சரித்திரம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் பி.சரோஜா, அம்மா பேரவைச் செயலாளா் சந்திரசேகா், திருச்செங்கோடு நகர செயலாளா் அங்கமுத்து, ஒன்றியச் செயலாளா்கள் திருச்செங்கோடு வடக்கு எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா், அணிமூா் கே.மோகன், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலாளா் பரணிதரன், இணைச் செயலாளா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

