நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தை தொடா்ந்து செயல்படுத்த எம்.பி. வலியுறுத்தல்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள், வெளியூா் பேருந்துகள் தொடா்ந்து வந்து செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அக். 26 வரை வெளியூா் பேருந்துகள் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டும், பொதுமக்களின் நலன்கருதியும் இவ்வாறான நடவடிக்கை மாநகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக திருச்சி, துறையூா் செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன.
பேருந்து நிலையத்திற்கு வெளியே கோடையின்போதும், மழைக்காலத்திலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். இந்த சூழலை தவிா்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் வெளியூா் பேருந்துகள் அனைத்தும் சென்றுவர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.
