நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 15 பயணிகள் படுகாயம்

Published on

புதுச்சத்திரத்தில் நின்றுகொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

சேலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

இந்த பேருந்து புதுச்சத்திரம் மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மத்திய பிரதேசத்திலிருந்து உயர்ரக காா்களை ஏற்றிவந்த கண்டெய்னா் லாரி மீது மோதியது.

இதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் குமாா் (55), நடத்துநா் வெங்கடேசன் (50) உள்பட 15-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தோா் காயமடைந்தவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்த்தனா். அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com