கோதுமையின் கழிவுப் பொருளான மைதா மாவை அதிகளவில் உபயோகிப்பதால் ஏற்படக் கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் கிளை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு முள்ளுவாடி கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.சாம்சன் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலர் வி.ராமமூர்த்தி வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜி.சுரேஷ் வரவு - செலவு அறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் ஏற்காடு இளங்கோ எழுதிய "மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா' என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்டத் தலைவராக ஏற்காடு பி.எஸ்.இளங்கோ, செயலராக வி.ராமமூர்த்தி, பொருளாளராக பாலசரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சேலம் மாவட்டத்தின் எழிலுக்கு வளம் கூட்டுவதுடன், மாவட்டத்தின் அடையாளங்களாகத் திகழும் ஏற்காடு ஏரி, பனைமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலைக்குள் உள்ள ஏரி, நீர்நிலைகளை தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்க வேண்டும்.
கோதுமையின் கழிவான மைதா மாவை அதிகமான அளவுக்கு எடுத்துக் கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாகிறது. மேலும், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிகோலுகிறது. எனவே, மைதா மாவு குறித்த ஆபத்துகளை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சேலம் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள கனிம குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டக் கருத்தாளர்கள் இ.தில்லைக்கரசி, டி.சத்தியமூர்த்தி, கே.இமயபாலன், மாநகரக் கிளைத் தலைவர் எம்.ஷாஹிரா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.