வாழப்பாடி அருகே நிலத் தகராறில் ஆத்திரமடைந்து விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை வாழப்பாடி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடாஜலம் (39). அவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறினால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆத்திரமடைந்து, காசிலிங்கம் மனைவி சிவகாமி, மகன் கலைமாமணி, அவர்களது உறவினர்கள் மணிகண்டன், பாலமுருகன் (33) ஆகியோர் சேர்ந்து விவசாயி வெங்கடாஜலத்தை தரக்குறைவாகத் திட்டியதோடு, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
அதில் காயமடைந்த வெங்கடாஜலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடாஜலத்தை தாக்கிய, மணிகண்டன், பாலமுருகன், கலைமாமணி ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான சிவகாமியைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.