பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் வலியுறுத்தினார்.
Updated on
1 min read

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் வலியுறுத்தினார்.
 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்துக்குப் பிறகு, மாநிலத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் செய்தியாளர்களிடம் கூறியது: கலப்பின மாடுகளை விட, நாட்டின மாடுகளைப் பராமரிப்பது மிகவும் சுலபமாகும். மாட்டுக்குத் தீவனமும் குறைவாகத் தேவைப்படும். இந்த நாட்டின மாடுகளின் பால் மருத்துவக் குணம் கொண்டதாகவும், தாய்ப்பாலுக்கு இணையானது என்று மருத்துவர்களாலும், விஞ்ஞானிகளாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நாட்டின மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் செயற்கை முறை கருவூட்டல் மையங்கள் மூலம் நாட்டின மாடுகளின் விந்துகளை முழு அளவில் பயன்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
 மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பல முறை கோரிக்கை விடுத்தபோதும் , பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
 தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் தீவன விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ரூ.37 வழங்கிட வேண்டும். எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூ.16 உயர்த்தி ரூ.45 வழங்கிட வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் பால் விலையை உயர்த்திட வேண்டும். பால் பரிசோதனையில் ஐ.எஸ்.ஐ. தர முறையை அமல்படுத்திட வேண்டும். பால் கொள்முதலில் கிலோ முறையைப் பயன்படுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜேந்திரன், ராமசாமி, கணேசன், பெரியண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com