ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தனியார் இணையதள மையத்தில் சான்றுகள், பட்டா மாற்றம் ஆகியவைகளை கணினியில் பரிந்துரை செய்து வருகின்றனர். அதற்கான தொகையை வழங்க முதல்வர் உத்தரவுக்கு பிறகும் அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது.
அந்த அரசாணையை உடனடியாக வெளியிடவேண்டும், கூடுதல் பொறுப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையினை பெற்ற பின்னர் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கலந்தாய்வு ஒரே நாளில் நடத்தி, மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த காலங்களில் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், வட்டாட்சியரிடம் மடிகணினிகளை ஒப்படைத்தும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்தும் போராட்டத்தில்ஈடுபட்டனர். அதையடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், ஓமலூர் வட்டக் கிளைத் தலைவர் சரவணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை நள்ளிரவு அலுவலகத்திலேயே உண்டும் உறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு வீட்டுக்குச் சென்று தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பினர்.