வாழப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனை நிறுத்தம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இரு ஆண்டுகளை கடந்தும், கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. போதிய வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இளநிலை உதவியாளர், மகப்பேறு உதவியாளர், ரத்த பரிசோதகர், சுகாதாரப் பணியாளர், உதவி செவிலியர், ஆய்வக உதவியாளர், பல்நோக்கு பணியாளர்கள், சமையலர் உள்ளிட்ட 10 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், ரத்த பரிசோதனை நிறுத்தப்பட்டதாலும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகளுக்கும் சென்றது.
இதனையடுத்து, சேலம் மாவட்ட குடும்ப நலம் மற்றும் ஊரகப்பணிகள் இணை இயக்குநர் சத்யா, மாவட்ட ஊரக நல அலுவலர் ரமேஷ் ஆகியோர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு முறையாக சிசிக்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், தேவையான நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கையை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது, வாழப்பாடி மருத்துவ அலுவலர் ராதிகா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.